ரோஜாவின் ஏக்கம் (சிறுகதை)
மழைக்காலம் தொடங்கி விட்டாலே சாருலதா வீடு வீடாக போக தொடங்கி விடுவாள். வேற எதற்கும் இல்லை. செடிகள் மீது காதல் கொண்டு அதை சேகரித்து வளர்த்து ரசிப்பதில்தான்.
மழையில் நனைந்துக் கொண்டே போய் செடிகளை சேகரிப்பதில் கூடுதலான சந்தோசம். அவளுக்கும் பிடித்த பருவம் இதுதான். இந்த செடி பக்கத்து வீட்டு ராணி அக்கா கொடுத்தது, இது எதிர் வீட்டு மேரி அக்கா கொடுத்தது என்று சொல்லிக் கொள்வதில் அவளுக்கு ஒரு தனி ஆசை. கொஞ்சம் விட்டால் போதும் சாரு செடிகளை வேறோடு பிடுங்கிக் கொண்டு வந்து விடுவாள்.
ரோஜா, மல்லி, முல்லை, செம்பருத்தி, செவ்வந்தி, அரளி என பல பூக்கள் அவள் வீட்டை அலங்கரித்து கொண்டு இருப்பதில் சந்தோசம் அடைவாள். அப்படி வளர்த்ததில் ரோஜா செடி அவள் உயரத்துக்கு வளர்ந்து பூத்து குலுங்கியது.
எப்பொழுது மாலை 4 மணியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்து பூக்களை பறிக்க தொடங்கி விடுவாள். பூக்களை பறித்து வந்து அதை அழகாக தொடுத்து சாமி தரிசனத்திற்கு வைத்து விட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுத்து தானும் தலையில் சூடிக்கொள்வாள். பூக்களை சாமியிடம் கொண்டுப்போய் சேர்ப்பதில் அவளின் பக்தியும், மற்றவர்களுக்கு பூக்களை கொடுப்பதில் அவளின் குழந்தைத்தனமான குணமும் அனைவருக்கும் பிடித்து போகும்
பூக்களின் மீது கொண்ட காதலால், அவள் ரோஜா பூக்களை மட்டும் பறிக்க மாட்டாள். ஆனால், குறைந்தது ஐந்து ஆறு தடவை ரோஜா பூக்களின் பக்கத்தில் போய் பார்த்து ரசித்து வருவாள். செடியில் இருப்பதுதான் அழகு என்று நினைத்துக்கொள்வாள். ரோஜா பூக்களின் இதழ்கள் விரிவதை பார்த்து விடவேண்டும் என்று ஆசை. ஆனால் அதை பார்க்க முடியவில்லை.
ஒரு நாள்... ரோஸ் பூவை பார்த்து ரசித்து விட்டு திரும்பியபோது, யாரோ அவள் தாவணியை பிடித்து இழுப்பது போல் இருந்தது. சற்றுப் பயத்தோடும் பதற்றத்தோடும் திரும்பிப் பார்த்தபோது "அது ரோஜா"தான். அதன் முட்கள் அவளது தாவணியில் மாட்டிக்கொண்டது. அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டப் போது, ரோஜா பூ அசைவதை பார்த்தாள். அது அவளை கண் அசைத்து அழைப்பதுப்போல் இருந்தது. காதலன் தன் காதலியை கண் அசைத்து அழைப்பது போன்ற உணர்வு அவளுக்குள் எற்பட்டது.
கிட்டப்போய் குனிந்து அதன் அழகை ரசித்தாள். "நீ என் அழகை மட்டும் ரசித்து விட்டு போகிறாயே, உன் பருவ வயதில் எவ்வளவு துள்ளிக் குதித்து வெளியில் போகிறாயே, இன்னும் இரண்டு நாள்களில் நான் உதிர்ந்து விடுவதற்குள் உன் கைகளால் என்னைப் பறித்து சூடிக்கொள்" என்று ஏக்கத்துடன் சொல்லுவதுப் போல் இருந்தது.
"பூ-பூத்துவிட்டாள் " உனக்கும் என் போல் ஆசையிருக்கும் என்பதை இவ்வளவு நாள்கள் உணராமல் போய்விட்டேனே?" என்று ரோஜாவிடம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு அதை மெதுவாக தொட்டுப் பறித்து அழகாக தன் தலையில் சூடிக்கொண்டாள்.
அவள் வெளியில் போய்விட்டு வீடு திரும்புவதற்குள் நான்கு பேராவது கேட்டுயிருப்பார்கள் " உன் வீட்டில் பூத்த ரோஜாவா? " என்று.
ரோஜாவின்
ஏக்கமும்
தீர்ந்தது,
சாருவும்
"ஆமாம்" என்று
சொல்லி
பெருமை பட்டுக்கொண்டாள்.
பெண்களின் மனம் பூ போன்றது. உண்மை தானே.
செடிகளை நடுவீர்.மரம் வளர்ப்போம்.இயற்கையை ரசிப்போம்.
இது சாராவின் படைப்பு..
உங்களின் ஆதரவு மற்றும் கருத்துக்களை பதிவு
செய்யவும்...
universaltopfocus@gmail.com




கருத்துகள்